சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இந்ந்திலையில் இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவிலிருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழை நீடித்தது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல தாம்பரம், பல்லாவரம், சேலையூர் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். சென்னை அயனாவரத்தில் ஓரே நாளில் 9.6 செ.மீ., மழைப்பதிவு; பெரம்பூர் - 8.8 செ.மீ., அம்பத்தூர் -8.5 செ.மீ., புரசைவாக்கம் 7.8 செ.மீ., மாம்பலம் 7.6 செ.மீ., எழும்பூர் 7.4செ.மீ., மயிலாப்பூர் 7 செ.மீ., தண்டையார்பேட்டை 6.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனிடையே வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் சீதாலெச்சுமி, மகேஷ்வரி, பொன்னையா, அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தேர்வு நடைபெறுவதால் சென்னையில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.