* பால் முகவர்கள் சங்கத்தினர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
சென்னை: ஆவின் நிர்வாகத்தில் நடந்து வரும் ஊழலில் தொடர்புடைய பால்வளத்துறை அமைச்சர், ஆவின் நிர்வாக இயக்குனர் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, பால் முகவர்கள் சங்கத்தினர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள் பொன்மாரியப்பன், பொருளாளர் டி.எம்.எஸ்.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ‘‘300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகத்தில் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஊழலில் ஆவின் நிர்வாக இயக்குநர், பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது. இவர்கள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.