×

கு.க.செல்வம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின்  வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2016ல் நடந்த பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.க.செல்வம் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆர்.செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘கு.க.செல்வம் தலைவராக உள்ள ஜெயா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக மதுரவாயலில் 150 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவரத்தை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை’ என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கு.க.செல்வம் மனு தாக்கல் செய்தார். ‘குறிப்பிட்டுள்ள சொத்து அறக்கட்டளையின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் பெயரிலேயே வருமானவரி செலுத்தப்படுகிறது. அடிப்படை ஆதாரமில்லாத இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணக்குமார், “குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் வழக்கு தொடர்ந்தவர் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.

Tags : SC ,victory ,Selvam , SC dismisses case ,Selvam's victory
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...