5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தும்பி வாலில் பாறாங்கல் கட்டுவதா? கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: ஒரு  தும்பியுடைய வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்ளோ கொடுமையான‌  விஷயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும்  சுமையை கட்டி ‌வைப்பது. இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும். இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும். ஜாதிகளாலும்  மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால ஏற்படப்போகும்  ஏற்றத்தாழ்வுகளாலதான் இப்போது பாதிப்பு அதிகமா இருக்கப்போகிறது. இந்த  பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது ஒரு குழந்தை இந்த சமூகத்தில்  வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி  போகும்.

நான் எட்டாவதோடு  என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு  குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல் படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக  இருக்கும். குழந்தைகளின்  எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன் தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள்  நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப் பெற  வலியுறுத்துகிறது.

இதற்கு  பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை  மேம்படுத்துவதிலும் கவனம் நீங்கள் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை  நமதாகும்.

Related Stories: