தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 1,000 ஏக்கர் வயல்களில் குறுவை நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போனது. நடப்பாண்டு ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு ஆங்காங்கே குறுவை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையால் 1,000 ஏக்கரில் நெய்பயிர்கள் அடியோடு வயலில் சாய்ந்து விட்டன. இதனால் நெல்மணிகள் அழுகும் அபாயம் எழுந்துள்ளது. விவசாயிகள், பயிர்களை நிமிர்த்தி கம்புகளில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.