நேரு குறித்து உபி எம்எல்ஏ சைனி சர்ச்சை கருத்து

முசாபர்நகர்: ஆங்கில பெண்மணி ஒருவருடன் நாட்டின் முதல் பிரதமர் நேரு தொடர்பு வைத்திருந்ததாக உத்தரப் பிரதேச பாஜ எம்எல்ஏ சைனி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கதுவாலி தொகுதி பாஜ எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி. இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொள்வார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் நாட்டின் பிறபகுதியில் உள்ளவர்கள் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய முடியும் என கடந்த மாதம் இவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முசாபர்நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சைனி, ‘‘நேரு ஒரு பெண்பித்தர். அவரது குடும்பத்தினர் அனைவரும் அப்படித்தான். ராஜிவ் காந்தியும் இத்தாலியில் திருமணம் செய்துள்ளார்’’ என்றார்.

சைனியின் கருத்து குறித்து தொலைகாட்சி ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நேரு வண்ணமயமான குணாதிசயம் கொண்டவர். அவர் ஆங்கில பெண்மணி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். நேரு குறித்து நான் பத்திரிகையில் படித்ததை தான் தெரிவித்தேன். அய்யாஷ் (பெண் பித்தர்) என்ற உருது வார்த்தையால் யாருடைய மனதாவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற தவறு இனி நேராது’ என்றார்.

Related Stories: