சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டு நின்றதால், தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி, சேலம் செல்வதற்காக நேற்றிரவு 12 மணி அளவில் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 26வது கொண்டைஊசி வளைவு அருகே சென்றபோது முன்புற அச்சு முறிந்து நகர முடியாமல் நின்றது. இதனால் 10 மற்றும் 12 சக்கர லாரிகள் மலைப்பாதையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மலைப்பாதையில் சென்ற 6 சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.