செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை ஆற்றுப்பாலம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரில் புறவழிச்சாலை இல்லாததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது.
அதேபோல் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் சிலநாட்களிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் ரோந்து சென்று விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு ஏற்படும் வகையில் நகருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.