கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆழ்த்துளை கிணறு, மின்மோட்டார், சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை கடந்த ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே மின் மோட்டார் பழுதடைந்ததால் மாணவர்கள் இதுநாள் வரை அதனை பயன்படுத்த முடியவில்லை.