சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சில நிமிடங்களுக்கு முன்னதாக திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்திருந்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பிலும், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஆளுநருடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக தற்போது உள்ள அரசிய சூழலில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கை மூலம் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் பொதுவான மொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக வருகிற 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.