மின்கம்பம் சாய்ந்த விவகாரம்: விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு

சென்னை: சிட்லபாக்கத்தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). மினி வேன் வைத்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு கனகதுர்கா என்ற மகள் மற்றும் ஹரிஹரநாதன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேதுராஜ் வீட்டுக்கு வந்த பிறகு தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில், சேதுராஜ் மீது மின் கம்பி விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சேதுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பம்  முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜின் உடல் நேற்று மதியம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அப்போது, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேதுராஜின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை வழியாக சேதுராஜின் வீட்டிற்கு  கொண்டுசென்றனர். அந்த சாலையில் சிட்லப்பாக்கம் காவல் நிலையம்  அருகில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் திடீரென சடலத்துடன் நுழைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேதுராஜின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லை என்றால் உடலை இங்கிருந்து எடுக்க மாட்டோம்  என கூறி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி  பரபரப்பானது. தகவல் அறிந்து வந்த சேலையூர் காவல் உதவி ஆணையர்  சகாதேவன் மற்றும் சேலையூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி  தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினார்கள். மின்வாரிய விதிகளுக்கு  உட்பட்டு இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அலுவலக  வளாகத்தில் இருந்து உடலை கொண்டு செல்லும்படி மின்வாரிய அதிகாரிகள்  பொதுமக்களிடம் நீண்டநேரம் கெஞ்சினர். பிறகு பொதுமக்கள் அங்கிருந்து உடலை  கொண்டு சென்றனர். பின்னர் இன்று சேதுராஜின் உடலுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இன்று காலை மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில்; இந்த விபத்தானது அங்குள்ள கனராக லாரி போனதன் அதிர்வில் கம்பம் முறிந்ததாக தெரிவித்தார்.

இது இறந்தவர்களின் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தடயவியல் துறை உதவி இயக்குனர் சோபியா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 10 நிமிடம் ஆய்வு செய்தனர். பின்னர் திரும்பி சென்றனர்.

Related Stories: