சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரவுடி மீது துப்பாக்கிசூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையில் தங்கமணி என்பவரை விரட்டி வெட்டிய ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் மீது வங்கி காவலாளி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். கனரா வங்கி அருகே தங்கமணியை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியபோது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார். மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக இருந்தவர் சரவணன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் அதில் தங்கமணி தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்கமணி நீதிமன்ற விசாரணையில் இருந்து ஜாமினில் வழியில் வந்தார். இந்த நிலையில், மானாமதுரை மரக்கடை வீதியில் தங்கமணி இன்று நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளனர்.