×

இலவச நூலகம்

நன்றி குங்குமம் முத்தாரம்

கொச்சி மட்டன் சேரியில் உள்ள யசோதாவின் வீடு எப்போதும் மக்களால் நிறைந்து கிடக்கிறது. பகல் வேளைகளில் யாராவது ஒருவர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் யாரும் யசோதாவின் உறவினர்கள் அல்ல. அப்புறம் ஏன் அந்த வீட்டுக்கு வருகிறார்கள் என்கிறீர்களா? தனது வீட்டுக்குள்ளேயே அழகான ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார் 12 வயதான யசோதா. புத்தகத்தை இரவல் வாங்கவும், படித்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவும் தான் மக்கள் யசோதாவின் வீட்டை மொய்க் கிறார்கள். இந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகம் எடுக்க கட்டணம் இல்லை என்பது ஹைலைட்.

காலை 9 மணி முதல் இரவு 7 மணிக்கு வரை நூலகம் திறந்திருக்கும். யசோதா பள்ளிக்குப் போன பிறகு அவரின் அப்பாவோ அம்மாவோ நூலகத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள். எட்டு மாதங் களுக்கு முன்பு திறக்கப்பட்ட நூலகத்தை யசோதாவின் அப்பா வரைந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. நூலகத்தில் இருந்தே படிப்பதற்கான இட வசதியும் உள்ளது. ‘‘என்னுடைய அப்பா நூலகத்திலிருந்து புத்தகத்தை இரவல் வாங்கும்போது பணம் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதைபற்றி நான் அவரிடம் கேட்டபோது, ‘‘புத்தகங்கள் இலவசமாக வருவதில்லை...’’ என்றார். பணமில்லாதவர்கள் எப்படி புத்தகத்தை வாசிப்பார்கள் என்பதைப் பற்றி யோசித்தேன். அது எனக்கு கவலையை அளித்தது. இந்தக் கவலை தான் நூலகம் ஆரம்பிக்க காரணம்...’’ என்கிற யசோதா எட்டு வயதில் இருந்து புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நூலகத்தைப் பற்றி முகநூலில் யசோதா பதிவிட, ஏராளமான புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. 2 ஆயிரம் புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தில் இப்போது 3,500க்கும் மேலான புத்தகங்கள் இருக்கின்றன. ஆங்கிலம், மலையாளம், இந்தி, சமஸ் கிருதம், கொங்கணி என பல்வேறு மொழிகளில் வெளியான நாவல்கள், கதைகள், கவிதைகள் உட்பட எதார்த்த புத்தகங்களும் நூலகத்தை நிறைக்கின்றன. எடுத்த புத்தகத்தை 15 நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும். தாமதமானால் அபராதம் இல்லை. இப்போது இணையத்தில் யசோதாவிற்கு பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கின்றன.


Tags : Kochi, Free, Library, 2 Thousand Book
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்