×

சென்னை இளம் காதல் ஜோடி நெல்லை எஸ்பி ஆபீசில் தஞ்சம்: பாதுகாப்பு கேட்டு மனு

நெல்லை: சென்னையைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது. சென்னை, பூந்தமல்லி பலராமன் நகரைச் சேர்ந்த ரகு மகள் அஸ்வதா (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். தென்காசி இடைகால், இந்திரா காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சின்னராஜ் (24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த காதல் ஜோடி நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. காவல்துறை அதிகாரிகளிடம் அஸ்வதா அளித்த மனு: சென்னை பூந்தமல்லியில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து, அங்குள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றிய சின்னராஜூக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்களின் காதலை அறிந்து கொண்ட எனது பெற்றோர் எனக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் சின்னராஜூம், நானும் சென்னையை விட்டு கிளம்பி கடந்த 15ம் தேதி தென்காசி விண்ணகர பெருமாள் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டோம்.

இந்நிலையில் என் தகப்பனார் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தது, தெரியவந்துள்ளது. நானும், எனது கணவரும் தென்காசி மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தோம். அங்குள்ள எஸ்ஐ என்னையும், எனது கணவரையும் தனித்தனியாக விசாரித்து திருமண போட்டோக்கள், திருமண ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நான் சட்டப்படி மேஜராகியுள்ளேன். எனவே எனது வாழ்க்கையை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். இந்நிலையில் என் தந்தையும், பூந்தமல்லி போலீசாரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வரும்படி அழைக்கின்றனர். அங்கு எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே என்னையும், எனது கணவரையும் காப்பாற்றி தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,office ,SP ,Tirunelveli , Tirunelveli, Chennai, Petition
× RELATED தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு