×

திருமங்கலம் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பள்ளி வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம், சிந்துபட்டி அருகே அம்பட்டையம்பட்டி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). போர்வெல் லாரி டிரைவர். இவரது மனைவி பால்பாண்டியம்மாள் (22). தம்பதிக்கு மனிஷா (2) மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை பால்பாண்டியம்மாள், தெருவில் உள்ள சாலையோர குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அருகே குழந்தை மனிஷா விளையாடி கொண்டிருந்தது.

அப்போது சிந்துபட்டியிலிருந்து தும்மக்குண்டுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வேன், அம்பட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது. வேனை பின்பக்கமாக டிரைவர் எடுத்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மனிஷா மீது மோதியது. இதில் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாய் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்த சிந்துபட்டி போலீசார், மனிஷாவின் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வேனை ஓட்டிவந்த தும்மக்குண்டை சேர்ந்த ஒச்சாத்தேவரை (47) கைது செய்தனர். வழக்கமான டிரைவர் விடுப்பில் சென்றதால், மாற்று டிரைவரால் விபத்து நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பள்ளி வேனில் வழக்கமாக வரும் கிளீனரும் நேற்று வரவில்லை. கிளீனரும் இல்லாமல் மாற்று டிரைவரை கொண்டு, பள்ளி நிர்வாகம் வேனை இயக்கியதால் குழந்தை உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலியான சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் சோகத்தை உண்டாக்கியது.

Tags : school van ,Thirumangalam Thirumangalam , Thirumangalam, baby killed
× RELATED மீஞ்சூரில் 4 வயது சிறுமிக்கு தொல்லை பள்ளி வேன் டிரைவர் கைது