இரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம்

ஊட்டி: இரண்டாம் சீசனை முன்னிட்டு இன்று(18ம் தேதி) ஊட்டி தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சீசனில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்த நிலையில், 15ம் தேதி மலர் அலங்கார பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நிர்வாக காரணங்களால் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று(18ம் தேதி) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார பணி மேற்கொள்ளப்படுகிறது. டேலியா, டெல்பீனியம், இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பெகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், சைக்லமன் ஆகிய வகைகளை அடங்கிய 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஒரு மாதம் இருக்கும்.

பொதுவாக இரண்டாம் சீசன் போது, தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. இம்முறை தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மட்டுமின்றி, பெர்ன் அவுஸ் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அலங்கார செடிகளை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரங்களும் மற்றும் மலர் தொட்டிகளை கொண்டும் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அலங்கார பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து இரண்டாம் சீசன் போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: