குமரி: ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழுவுடன் திருவாடனை போலீசார் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாலைக்குடியில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு கிளை வங்கி அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் திருப்பாலைக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்தனர். வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.