சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 1325 பணியிடங்களில் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களான தையல், ஓவியம், விவசாயம், இசை உள்ளிட்ட சிறப்பு பாட ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த 2016ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அதில் தேர்ச்சி அடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவுப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் கேட்டனர். ஆனால், போட்டித் தேர்வு நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் தெரிவுப் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு ஒரு தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த பட்டியல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியாகவில்லை என்று கூறி சிறப்பு ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.