மதிமுகவினரை கைது செய்ய அதிமுகவில் அழுத்தம் கொடுப்பது யார்?: வைகோ கேள்வி

சென்னை: பெரியாரின் 141வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:நந்தனம் மைதானத்தில் நடந்த மாநாட்டு வளாகத்தில் போகிற வழியில் வைக்கப்பட்டிருந்த கொடிகளை அகற்றுவதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பை விலக்கி விட போனவர்களில் ஒருவரான எங்கள் தென்சென்னை மேற்கு  மாவட்ட செயலாளர் சைதை சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் காவல்துறையை கண்டிக்கிறோம். அந்த சம்பவத்தை விலக்க சென்ற தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரிடம் 307வது பிரிவில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்தவர்கள் மீதெல்லாம் நீங்கள் வழக்கு போடுவது கிடையாது. கோரமாக அரிவாளால் வெட்டி குத்துயுறும், கொலையுறுமாக கிடந்தவழக்கில் நீங்கள் 306 பிரிவில் தான் வழக்கு போடுகிறீர்கள். நான் விசாரித்தில் மேலிடத்தின்  அழுத்தம் என்று சொல்கிறார்கள். அப்படியெனில் எடப்பாடி அழுத்தம் கொடுக்கிறாரா?. ஒரு மாவட்ட செயலாளர் மீது 307வது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்வது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை சுப்ரமணியன் உள்பட மதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே துணைப் பொதுச் செயலாளர்  மல்லை சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: