சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு மோடி - சீன அதிபர் வருகை: மாவட்ட கலெக்டர் ஆய்வு

சென்னை:  உலக அளவில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற மாமல்லபுரத்திற்கு வருகிற அக்டோபர் 11ம் தேதி வாக்கில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் 3 நாள் பயணமாக வருகை தர  உள்ளதாகவும் அவர்கள் மாமல்லபுரத்திலுள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் ஆகியவைகளை பார்வையிட்டு சீனா- இந்தியா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு  ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட உள்ளதாகவும், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சாலைகளை சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது  ஆகியவைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். மாவட்ட கலெக்டரின் இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட அலுவலர் தர், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், துணை  தாசில்தார் ரபீக், சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: