பெங்களூரு: கர்நாடகாவில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒசகோட்டை தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எம்டிபி நாகராஜின் பதவியை பறிக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை பரிசீலனை செய்த அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார், எம்எல்ஏ பதவியை ரத்து செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகராஜ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையில் தனக்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக கோயிலில் சிறப்பு பூஜை செய்ய நாகராஜ் முடிவு செய்தார். அதன்படி பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி தாலுகா, காளகப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள பழமையான பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடத்தினார். பின்னர், அம்மனை உற்சாகப்படுத்த பம்பை, வாத்திய இசை கருவிகள் மூலம் பாடல் இசைக்கப்பட்டது. பம்பை, பாண்டு வாத்திய இசைக்கலைஞர்களின் வாசிப்புக்கு ஏற்றபடி எம்டிபி நாகராஜ் தனது வாயில் எலுமிச்சை பழத்தை கடித்துக் கொண்டு பாம்பு நெளிவதை போல் நாகினி நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.