கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரூ.2,500 கோடி சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மேற்கு வங்க மாநில அரசு நியமித்த சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இந்த குழுவில் இருந்த காவல்துறை அதிகாரி ராஜிவ் குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோது முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும், நிதி நிறுவன மோசடி குறித்தும் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ராஜிவ் குமாரையும் சிபிஐ குற்றவாளியாக சேர்த்துள்ளது. இந்த வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க, நீதிமன்றத்தில் அவர் தடை பெற்றிருந்தார். சில தினங்களுக்கு முன் இந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கு சிபிஐ தீவிரமாக தேடி வருகிறது.