சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ.யை 2வது முறையாக ஏமாற்றினார் ராஜிவ் குமார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரூ.2,500 கோடி சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மேற்கு வங்க மாநில அரசு நியமித்த சிறப்பு விசாரணை  குழு விசாரித்தது. இந்த குழுவில் இருந்த காவல்துறை அதிகாரி ராஜிவ் குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோது முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும், நிதி நிறுவன மோசடி  குறித்தும்  சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ராஜிவ் குமாரையும் சிபிஐ குற்றவாளியாக சேர்த்துள்ளது. இந்த வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க, நீதிமன்றத்தில் அவர் தடை பெற்றிருந்தார். சில தினங்களுக்கு முன் இந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கு சிபிஐ தீவிரமாக தேடி வருகிறது.

இந்நிலையில், சிபிஐ விசாரணைக்காக சால்ட் லேக் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகும்படி ராஜிவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை பிடிப்பதற்காக சிபிஐ சிறப்பு படையை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் புதிய மனுவை தாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமீன் வழங்க  நீதிமன்றம் மறுத்துவிட்டது.  இதனை தொடர்ந்து முன்ஜாமீன் வழங்க கோரி பரசாத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தை அவர் அணுகினார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

Related Stories: