பள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கீழையூர் பகுதியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி  உள்ளது. அப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த வகுப்பின் ஆசிரியராக செம்பனார்கோவில் திருநகரை சேர்ந்த பாஸ்கர்(42) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி வகுப்பில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பாஸ்கர் படிக்க வந்தாயா? விளையாட வந்தாயா என்று கேட்டு தன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியின் இடதுகையில் குத்தியுள்ளார். மாணவி கையிலிருந்து ரத்தம் சொட்டச்சொட்ட வீட்டிற்கு ஓடிவிட்டார். இதைக் கண்ட அவரது பெற்றோர் நேற்று மதியம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கையில் எப்போதும் சின்ன கத்தி வைத்து இருப்பார் என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார், ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர்.

Related Stories: