சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் அவதூறு மீம்ஸ் பதிவு செய்து வருவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவதூறு மீம்ஸ் பதிவு செய்து வந்த நபரை கண்காணித்தனர். இதில், தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எட்வின் கிறிஸ்டோபர்(40) இந்த மீம்ஸ்களை பதிவேற்றி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.