சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம், அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். இவ்வாறு கமல் பேசியுள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட கருத்தில், ‘இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும்போது அது மக்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல. ஜனநாயகத்திற்காக’ என கூறியுள்ளார்.