கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. இந்த வழக்கில் சிபிஐயினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் விலக்கி கொண்டது. அதோடு, வழக்கில் ஆஜராக சிபிஐ பிறப்பித்த சம்மனை ரத்து செய்யவும் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகாததால் ராஜிவ் குமாரைத் தேடி சிபிஐ அதிகாரிகள் அவரின் வீடு, அரசு இல்லத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சிபிஐ அதிகாரிகள் நேற்று மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்துக்கு சென்றனர்.