பெரம்பலூர் அருகே திருவிழாவில் தகராறு டாஸ்மாக் பாரில் அடுத்தடுத்து 2 பேர் கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர்அருகே டாஸ்மாக் பாரில் குடிபோதையில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே நல்லறிக்கை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம்(34). அரியலூர் மாவட்டம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(37). இவர், அதே கிராமத்தில் தனது மாமனார்  படைகாத்து வீட்டில் தங்கி அங்கேயே டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். சண்முகத்திற்கும், ஆனந்தனுக்கும் தேர்த்திருவிழா பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மெக்கானிக் ஆனந்தன் அதே கிராமத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அதே கடைக்கு சண்முகமும் சென்றுள்ளார். பாரில் மதுகுடித்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில்  ஆத்திரமடைந்த மெக்கானிக் ஆனந்தன், கத்தியால் சண்முகத்தை குத்தி கொலை செய்தார். இதனை கேள்விப்பட்டு சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம் (37) மற்றும் அவரது உறவினர்கள் டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த  ஆனந்தனை பீர்பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம், அவரது உறவினர்கள் ஆணைமுத்து (53), சின்னதுரை(35), சேட்டு(30) ஆகிய  4 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: