ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு வரும் 20ம்தேதி தொடக்கம்: சென்னையில் மட்டும் 2 இடத்தில் நடக்கிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இரண்டு இடங்களில் தேர்வு நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை  நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு 11 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. ஜூலை 12ம் தேதி முதல்  நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 20ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது)  நடக்கிறது. 21ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது.

22ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4), 28ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. கடைசி நாளான 29ம் தேதி காலையில்  விருப்பப்பாடம் முதல்தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடக்கிறது.மெயின் தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் மாதம் ெவளியிடப்படும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறும். இறுதி  தேர்வு முடிவு ஏப்ரலில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை

யு.பி.எஸ்.சி. ெவளியிட்ட அறிவிப்பில், “தேர்வு ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் செல்ல வேண்டும். தேர்வு தொடங்கிய 10 நிமிடங்களுக்கு பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத  அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்துக்கு செல்போன், மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் எதிர்வரும் தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படுவார்கள். தேர்வு கூடத்திற்கு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories: