டெஹ்ரான்: ஆசிய ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் சி பிரிவில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன.முதல் போட்டியில் 3-2 என்ற செட்களில் கஜகஸ்தானை வென்ற இந்தியா, 2வது போட்டியில் சீனாவிடம் 3-0 என்ற செட்களில் வீழ்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், ஓமனை 3-1 என்ற செட்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் கால் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற்றது. துமட்டுமின்றி சீனாவில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது. இதில் வென்றால் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம்.