நகரும் வீடு

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆசியாவிலேயே வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு பிலிப்பைன்ஸ். 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி பிலிப்பைன்ஸின் மக்கள் தொகை சுமார் 10.5 கோடி. 2030-ம் ஆண்டில் 13 கோடிப் பேர் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளின் தேவையும் பிலிப்பைன்ஸில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் மணிலாவில் நான்கு லட்சம் பேர் சரியான வீடு இல்லாமல் தவிக்கின்றனர். ஆயிரம் பேர் வாழவேண்டிய ஒரு இடத்தில் 50 ஆயிரம் பேர் வாழவேண்டிய இட நெருக்கடி வேறு.

அவர்கள் எந்தவித வசதியும் இல்லாத சிறு வீடுகளில் வசிக்கின்றனர். இன்னும் மூன்று வருடங்களில் மணிலாவின் மக்கள் தொகை பெருமளவு அதிகரித்திருக்கும். அத்துடன் வேலை விசயமாக மணிலாவுக்குப் படையெடுப் பவர்களும் அதிகரித்திருப்பார்கள்.  அப்போது வீட்டின் தேவை இன்னும் பல மடங்கு உயர்ந் திருக்கும்.  நாட்டின் நிலையை சரியாகப் புரிந்துகொண்ட தொழில் அதிபர் பாட்ரிக், இப்போதே வீட்டைக் கட்டி விற்கத் தொடங்கி விட்டார்.

இங்கேயும் கூடத்தான் நிறைய பேர் வீட்டைக் கட்டி விற்பனை செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அந்த தொழில் அதிபர் விற்பனை செய்வது மூங்கில்களால் ஆன நகரும் வீட்டை. சின்ன வயதில் பாட்ரிக் தாத்தா, பாட்டியின் வீட்டில் வளர்ந்திருக்கிறார். முழுக்க முழுக்க மூங்கில்களால் ஆன தாத்தாவின் வீடு அவரை பெரிதும் கவர்ந்திருக்கிறது. சின்ன வயதில் தாத்தாவின் வீட்டில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள்தான் அவரை மூங்கில் வீடுகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

காலையில் நீங்கள் வீட்டை ஆர்டர் செய்தால் மாலையில் தயாராகிவிடும். ஒரு மூங்கில் வீட்டைக் கட்டி முடிக்க அதிகபட்சமாக நான்கு மணி நேரம் ஆகிறதாம். அப்பா, அம்மா, குழந்தை என்று மூன்று பேர் அந்த வீட்டில் தாராளமாக வசிக்கலாம். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்குத் தகுந்தபடி வீடுகளை வடிவமைத்தும் கொடுக்கிறார் பாட்ரிக். வீட்டின் விலை சுமார் 64 ஆயிரம் டாலர். அதாவது 45 லட்ச ரூபாய்.

Related Stories: