×

இந்தியா குடியரசு ஆனபோது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது: கமல் எச்சரிக்கை

சென்னை: இந்தியா குடியரசு ஆனபோது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது என்று கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக, என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தோன்றி கூறியதாவது, பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்கைள விட்டுக்கொடுத்து உருவானது தான் இந்தியா. ஆனால், விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள், பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும், கலாச்சாரமும் என்பது தான். 1950ல் இந்தியா குடியரசு ஆனபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி.

எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால் அது, அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை, வாங்காளிகளை தவி. இருப்பினும், அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம், பாடிக்கொண்டு இருப்போம். காரணம், அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால், குமட்டிவிடும். தயவு செய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் கான முடியும், என்று பேசியுள்ளார்.


Tags : Shao ,Sultan ,India ,government ,Kamal ,republic , Tamil language, Kamal Haasan, Hindi imposition
× RELATED சுல்தான் பத்தேரி ஊர் பெயரை...