சென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் மண்புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுரோடு வழியாக ஆந்திராவுக்கு காரில் கடல் மண்புழு கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கவரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படையினர் தச்சூர்கூட்டு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா நோக்கி வேகமாக வந்த காரை போலீசார் மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் வயல்வெளியில் இறங்கி தப்பி ஓடினர். பின்னர் அந்த காரை காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தனர்.