ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 கோடி மதிப்புள்ள கடல் மண்புழு பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேருக்கு வலை

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள  கடல் மண்புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுரோடு வழியாக ஆந்திராவுக்கு காரில் கடல் மண்புழு கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கவரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படையினர் தச்சூர்கூட்டு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா நோக்கி வேகமாக வந்த காரை போலீசார் மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் வயல்வெளியில் இறங்கி தப்பி ஓடினர். பின்னர் அந்த காரை காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தனர்.

அந்த காருக்குள் 23 கைப்பைகளில் கடல் மண்புழுக்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி என கூறப்படுகிறது. மேலும், சென்னை எண்ணூரில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடல் மண்புழுக்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

காருடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் மண்புழுக்களை மாதர்பாக்கம் பகுதியில் உள்ள வனத்துறை ரேஞ்சர் மாணிக்கவாசகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கடல் மண்புழுக்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: