ஆலந்தூர்: ஆலந்தூர் அடுத்த உள்ளகரம், புழுதிவாக்கம் நகராட்சி பகுதி கடந்த 2011ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி 168, 169வது வார்டாக மாறியது. நகராட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணி மாநகராட்சியாக மாறியபின் பொதுமக்கள் போராடியதின் விளைவாக முடிக்கப்பட்டது. இந்த பணி முடிந்த இடங்களில் ஆங்காங்கே மேன்ஹோல்களும் அமைக்கப்பட்டு சாலைகளும் போடப்பட்டது. சாலைகள் அமைத்த போது மேன்ஹோல்கள் அனைத்தையும் மூடிவிட்டனர். தற்போது இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேன்ஹோல்கள் மூடப்பட்டுள்ளாதால், இதனை மேலே உயரத்தி அமைக்க டெண்டர் விடப்பட்டது.
சிலபகுதிகளில் மட்டும் மேன்ஹோல்களை உயர்த்தி அமைக்கும் பணி நடந்தது. ஆனால் சீனிவாசா நகர், ராமலிங்கம் நகர், பாகிரதி தெரு, ராம்நகர் போன்ற பகுதிகளில் இந்தப்பணியினை முடிக்காமல் விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் புதிய இணைப்புக்காக அனுமதி பெற்றவர்கள் மேன்ஹோல்கள் தென்படாததால் இதுவரை இணைப்பு பெறமுடியாமல் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஒப்பந்ததாரர் சரிவர பாதாள சாக்கடை இணைப்புகளை முடிக்கததால் ஆங்காங்கே மேன்ஹோல்கள் உள்வாங்கி காணப்படுகிறது. மீண்டும் இதற்காக தனியாக டெண்டர் விட்டு சில இடங்களில் மேன்ஹோல்கள் உயர்த்தப்பட்டது. ஆனால் சிமெண்ட் பூச்சு சரி வர செய்யப்படாமல் உள்ளது. மேலும் பல இடங்களில் இந்த வேலையும் துவங்கப்படாமல் உள்ளது. எனவே கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்க உத்தரவிடவேண்டும்” என்றனர்.