நிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும், இம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான  சித்தராமையா, பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடக  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின்  

உதவிகள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த 2009ல்  எடியூரப்பா முதல்வராக இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.  பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உடனடியாக ரூ.1500 கோடியை விடுவித்தார்.தற்போது  மாநிலத்தில் மட்டும் இன்றி மத்தியிலும் பாஜ ஆட்சி நடக்கிறது. இரண்டாவது  முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாலும் மாநிலத்தின் நலனை  முற்றிலும் புறக்கணித்து வருகிறார்.பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நமது பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்கள் நிதி பற்றாக்குறையால்  பாதியில் நிற்கின்றன. வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு  இதுவரை நிவாரண நிதி வழங்கவில்லை என்பதே பாஜ அரசின் நிதி நிலைக்கு சிறந்த  உதாரணமாகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மத்திய அரசு திவாலாகும் நிலையில் இருக்கிறது. எனவே, மாநிலத்தின் நிதி நிலை மற்றும் மத்திய  அரசின்  நிதி நிலையை  வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: