பட்டாசு வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், மாரனேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆலைக்கு சொந்தமான வேன், சிவகாசி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 16 பேரை ஏற்றிக்கொண்டு பட்டாசு ஆலைக்கு சென்றது. தாயில்பட்டி சாலையில் சுப்பிரமணியாபுரம் விலக்கு அருகே, பஸ்சை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நாகனேரி குருமுத்து (30), இடையபொட்டல்பட்டி செல்லப்பாண்டியன் (15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் இடையபொட்டல்பட்டியைச் சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திக் ராஜா (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை காவியா (4), சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரனேரி பகவதி (20) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: