ஹோசிமின்: வியட்நாம் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் சீனாவின் சன் பெய் ஜியாங்குடன் நேற்று மோதிய வர்மா 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜியாங் 21-17 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் உறுதியுடன் விளையாடி புள்ளிகளைக் குவித்த வர்மா 21-12, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் 1 மணி, 12 நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு டச் ஓபன் மற்றும் கொரியா ஓபனில் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தி அசத்திய வர்மா, நடப்பு சீசனில் ஐதராபாத் ஓபன் மற்றும் ஸ்லோவேனியன் ஓபனை தொடர்ந்து வியட்நாம் ஓபனிலும் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.