சம்பள பில்லில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் கையாடல் செய்த சேலம் மாநகராட்சி ஊழியர் கைது

சேலம்: சேலத்தில் சம்பள பில்லில் திருத்தும் செய்து, ரூ. 86 லட்சம் கையாடல் செய்த மாநகராட்சி ஊழியர், தனது சகோதரருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி,அம்மாப்பேட்டை,கொண்டலாம்பட்டி ஆகிய  நான்கு மண்டலங்கள் உள்ளன. இதில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் வெங்கடேஷ்குமார், சம்பள பில் பட்டியல் மற்றும் ஊதிய காசோலைகளை திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் கையாடல் செய்திருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி மண்டல உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், துப்புரவு பணியாளர் வெங்கடேஷ்குமார், சம்பள பில்லில் திருத்தம் செய்து தனது தாயார், சகோதரர், அவரது மனைவி வங்கி கணக்குகளில் ரூ.86.45 லட்சத்தை பரிமாற்றம் செய்து கையாடல் செய்ததும், அலுவலக பணியாளர்கள் 2 பேருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ்குமார், அவரது சகோதரர் மோகன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே, மாநகராட்சி பணத்தை கையாடல் செய்த வெங்கடேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories: