இஸ்லாமாபாத்: ‘‘காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் இந்தியாவுடன் பேச்சு என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அணு ஆயுத நாடுகள் என்பதால், பாகிஸ்தான் தோற்றாலும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்,’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அல்-ஜசீரா டிவி.க்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கே இடமில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக காஷ்மீரை சட்ட விரோதமாக இந்தியா இணைந்து கொண்டுள்ளது. இந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்புகள் உள்ளன. இது, ஆசிய துணை கண்டத்தையும் தாண்டிச் செல்லும். அதனால்தான், ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் முறையிடுகிறோம். பாகிஸ்தான் ஒரு போதும் போரை தொடங்காது. நான் சமாதானத்தை விரும்புபவன். போருக்கு எதிரானவன். போர் எந்த பிரச்னையையும் தீர்க்காது. ஆனால், இரண்டு அணு ஆயுத நாடுகள் போரில் ஈடுபடும்போது, அது அணு ஆயுத போரில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.