இந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்பு பாகிஸ்தான் தோற்றாலும் விளைவு மோசமாக இருக்கும்: இம்ரான் கான் பேட்டி

இஸ்லாமாபாத்: ‘‘காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் இந்தியாவுடன் பேச்சு என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அணு ஆயுத நாடுகள் என்பதால், பாகிஸ்தான் தோற்றாலும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்,’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அல்-ஜசீரா டிவி.க்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கே இடமில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக காஷ்மீரை சட்ட விரோதமாக இந்தியா இணைந்து கொண்டுள்ளது. இந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்புகள் உள்ளன. இது, ஆசிய துணை கண்டத்தையும் தாண்டிச் செல்லும். அதனால்தான், ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் முறையிடுகிறோம். பாகிஸ்தான் ஒரு போதும் போரை தொடங்காது. நான் சமாதானத்தை விரும்புபவன். போருக்கு எதிரானவன். போர் எந்த பிரச்னையையும் தீர்க்காது. ஆனால், இரண்டு அணு ஆயுத நாடுகள் போரில் ஈடுபடும்போது, அது அணு ஆயுத போரில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துகூட பார்க்க முடியாது. இந்தியா உடனான போரில் பாகிஸ்தான் தோற்றால், இரண்டே வா்ய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, சரணடைய வேண்டும். அல்லது சுதந்திரத்துக்காக சாகும் வரை போராட வேண்டும். சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் மக்கள் சாகும் வரை போராடுவார்கள் என்பது எனக்கு தெரியும். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் எடுத்தது. ஆனால், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சித்தது. நிதி நடவடிக்கை குழு கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் தள்ளப்பட்டால், அதன் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும். பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை முடக்க இந்தியா முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: