திருப்புவனம்: திருப்புவனம் அருகே மாயமான கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு, ஆற்றில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 நாட்களுக்குப் பின் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருப்புவனம் கோட்டையில் உள்ள செட்டிய தெருவில் மனைவி இந்திரா, மகன் அஜீத்குமார்( 19) ஆகியோருடன் வசித்து வந்தார். திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அஜீத்குமார் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 2 மாதங்களாக அஜீத்குமார் கல்லூரிக்கு செல்லாததால், அவருக்கு மருத்துவச்சான்றிதழ் வாங்குவதற்காக செப்.4ம் ேததி மகனுடன் பழைய சந்தை திடலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்பிரமணி சென்றார். சான்றிதழ் வாங்கிய பின்பு அஜீத்குமார் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து தனது மகனை காணவில்லையென திருப்புவனம் போலீசில் கடந்த 9ம் தேதி சுப்பிரமணி புகார் செய்தார். மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் மாரிக்கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு அஜீத்குமாரை தேடி வந்தனர்.
அப்போது, கடந்த ஓராண்டுக்கு முன்பு திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தை சேர்ந்த முனியாண்டி, ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜீத்குமாருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அப்போது அஜீத் மைனராக இருந்ததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கொத்தங்குளம் முனியாண்டியின் நண்பர்கள் சிலரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், செப்.4ம் தேதி இரவு அஜீத்குமாரை கத்தியால் குத்தியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்து வைகை ஆற்றில் மடப்புரம் செல்லும் வழியில் குழி தோண்டி புதைத்ததாக தெரிய வந்தது.இதையடுத்து நேற்று மாலை மடப்புரம் விஏஓ சுந்தரி கொடுத்த புகாரின் பேரில், தாசில்தார் ராஜா, டிஎஸ்பி கார்த்திகேயன் முன்னிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் தலைமையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இக்கொலை தொடர்பாக திருப்புவனத்தைச் சேர்ந்த திவாகரன்(20) கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.