சிவகங்கை: சிவகங்கை பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் (காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டு திருவிழாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து கடந்த 10ம் தேதி காப்பு கட்டினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து, அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை சாமியாடுபவர்களும், மற்ற சிலரும் அப்படியே குடித்தனர். காளிக்கு எருமையையும், பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். 11 எருமைகள், 30 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.