தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாக்பூர்: தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதுவும் கடந்து போகும் என அறிவுரை கூறியுள்ளார். விதர்பா என்ற நிறுவனங்கள் கூட்டமைப்பின் 65ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.

ஆட்டோ மொபைல் துறைக்கு இது கடினமான காலம் என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி, உலகப் பொருளாதார நிலைமை காரணமாக, தேவை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக அளவில் வணிகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அதிருப்தி அடைய வேண்டாம் எனவும் தேற்றினார். சில முறை வெற்றியும், சில முறை தோல்வியும் ஏற்படுவது வாழ்க்கை சுழலில் வழக்கமானது தான் என அறிவுரை கூறிய நிதின் கட்கரி, எல்லாம் கடந்து போகும் என்றும், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். அடுத்த மூன்று மாதங்களில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 68 சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதால், வர்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

Related Stories: