சென்னை : பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பொதுப்பணித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மருத்துவ முகாம்கள் அமைத்தல், சுத்தமான குடிநீர் வழங்கல், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய் தடுத்திடல், அவசர தேவைக்காக மோட்டார் பம்ப் செட், ஜெனரேட்டர், கையடக்க மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் பருவ மழைக்கு முன்பாக பணிகள் அனைத்தையும் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.