கழிவறைக்கு சென்று வருவதாக கூறி ஆண் குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு பெண் எஸ்கேப்

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ஹேமலதா (44), தனது கணவர் முருகனுடன் நேற்று மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்துள்ளார். உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடை அருகே இவர்கள் அமர்ந்து சமோசா வாங்கி சாப்பிட்டனர். அப்போது, இரண்டரை மாத ஆண் குழந்தையுடன் அங்கு வந்த 21 வயது மதிக்கத்தக்க பெண், ‘‘கழிவறைக்கு செல்கிறேன். அதுவரை எனது குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். உடனே வந்து விடுகிறேன்,’’ என்று கூறினார். இதையடுத்து, ஹேமலதா அந்த குழந்தையை பெற்றுக்கொண்டார்.

ஆனால், ஒரு மணி நேரமாகியும் அந்த இளம்பெண் திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த தம்பதி அக்கம்பக்கத்தில் பார்த்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணை காணவில்லை. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசாரிடம் கூறி, குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: