மதுரை: விழா நடக்கும் இடத்தில் ஒரு பேனர் வைத்தால் தவறில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை, ஜீவா நகரில் நடந்த மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்க விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்று, அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்து இருந்தனர். அதனை அகற்றும்படி கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: அரசு திட்டம் துவக்கப்படும் இடத்தில் அந்த திட்டத்தை விளக்கும் வகையில் ஒரு பேனர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அந்த திட்டம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும். ஒரு திருமணமோ, அரசு விழாவோ அதனை விளக்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஒரு பேனர் வைப்பதில் தவறு இல்லை’’ இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
கடம்பூர் ராஜூ: சேலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில்,:
சென்னையில் பேனர் சரிந்து பெண் உயிரிழந்த விவகாரம், திடீரென ஏற்பட்ட சம்பவம். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பேனர்
வைக்க வேண்டாம் என முதல்வரும், துணை முதல்வரும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றார்.