மந்தநிலை நீடித்தாலும் கார்களுக்கு ஜிஎஸ்டி குறைய வாய்ப்பில்லை

புதுடெல்லி: கார் உட்பட வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மந்த நிலை காரணமாக நூற்றுக்கணக்கான ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. 3.5 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தொடர்ந்து 10வது கடந்த ஆகஸ்டிலும் வாகன விற்பனை சரிந்தது. இது 21 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவாக கருதப்படுகிறது. எனவே, மந்த நிலையை போக்க கார் உட்பட வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுவதாவது: வாகனங்கள் மீது ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கக்கோரி வந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மட்டுமின்றி உதிரி பாகங்கள் மீதும் வரியை குறைக்க வேண்டி வரும். இதனால் அரசுக்கு வரி வருவாயில் ஆண்டுக்கு 55,000 கோடி முதல் 60,000 கோடி வரை இழப்பு ஏற்படும். அதோடு, மீண்டும் வரியை உயர்த்தவும் முடியாது. எனவே, வரி குறைப்பு சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றனர்.

Related Stories: