வெளிநாட்டு நிறுவனத்துக்கு பாரத் பெட்ரோலியத்தை விற்க அரசு திட்டம்

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய துறைஉட்பட பொதுத்துறை நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன்மூலம், இவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கதிட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் 1.05 லட்சம் கோடி ஈட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. மத்திய அரசு தன்னிடம் உள்ள பங்குகள் அனைத்தையும் விற்பதன் மூலம் நிர்ணயித்துள்ள இலக்கில் சுமார் 40 சதவீதம் (சுமார் 40,000 கோடிக்கு மேல்) திரட்ட முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, மத்திய அரசிடம் உள்ள கட்டுப்பாடு முழுவதும், இந்த பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு சென்றுவிடும் என மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை பொறுத்தவரை ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனம் இந்திய எண்ணெய் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. சவூதி அரேபியாவின் அராம்கோ, பிரெஞ்சு நாட்டை சேர்ந்த டோட்டல் எஸ்ஏ போன்ற நிறுவனங்களும் இந்த பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன என கூறினர். பொதுத்துறை நிறுவன பங்கை இவ்வாறு ஒரே வெளிநாட்டு நிறுவனத்துக்கே விற்பனை செய்வது லாபகரமாக தோன்றினாலும்,  சந்தையில் ஒன்றை மேலாதிக்கத்துக்கு வழி வகுக்கும் என பொருளாதார மற்றும் சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: