காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், அல்கொய்தா தீவிரவாதிகளால் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தகர்க்கப்பட்டது. பயணிகள் விமானத்தை கடத்திய தீவிரவாதிகள், அதை இரட்டை கோபுரங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இதில், கட்டிடம் தரைமட்டமானது. இதில், ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் 18வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை துவங்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நள்ளிரவு அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடித்த இடத்தில் இருந்து அனைத்தும் சரி செய்யப்பட்டது.