சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், வழக்கத்துக்கு முன்னதாகவே டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் வகை கொசு, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தேங்கிய நல்ல நீரில் உருவாகி நோய்களை பரப்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.