சென்னை: காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரியும், காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அக்பர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: சென்னையில் அமைந்துள்ள பூக்கடை வடக்கு சரக காவல் மாவட்டத்தில் மட்டும் ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. சென்னையின் மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் இந்த தகவலை பெற்றுள்ளேன்.