ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கல்லூரி மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தினமும் கல்லூரி பஸ்சிலேயே சென்று வந்துள்ளார். அப்போது, ஒரு வாலிபர் பைக்கில் பின்தொடர்ந்து வருவாராம். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை நோட்டமிட்ட அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக படம் பிடித்துள்ளனர். அதனை அந்த மாணவியிடம் காண்பித்து, காதலனுடன் இருக்கும் வீடியோ காட்சியை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியையும் மாணவிக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு தங்களது ஆசைக்கு அவ்வப்போது இணங்க வேண்டுமென மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.